என்னை அறிந்தவர்கள், என்னை அறிந்தவரையில் அறிந்தது, எனது முதல் மகள் மற்றும் இரண்டாவது மகன் பற்றித்தான். அவர்கள் எனது இரண்டாவது மகளை அறிந்திருந்தாலும், அவளை எனது இரண்டாவது மகளாக அறிந்திருக்க மாட்டார்கள். அவளை இரண்டாயிரத்து ஏழாமாண்டின் இறுதியில் வீட்டிற்கு அழைத்து வந்ததிலிருந்தே, எங்களுள், குறிப்பாக, எனக்கும் அவளுக்கும் நெருக்கம் அதிகம். அவளும் நானும் மட்டும் அளவளாவிய, உரையாடிய மணித்துளிகள் மிகுதியானவை. அத்தருணங்கள் அனைத்தும் வார்த்தைகள் எங்களை தனியே விட்டு வெகு தூரம் போன நினைவுத்திவலைகள. பல நேரங்களில்
பாடல்களாக, அவள் பாட நான் கேட்க, சில நேரங்களில் சுருதி சேர்ந்தும் சேராமலும் நானும்
அவளும். பல நேரங்களில் இளையாராஜாவும், சில சமயம் ரகுமானும் மற்றும் பலரும் எங்களோடு
இசை வடிவில். குடும்பமனைவரும் அவளுடன் சேர்ந்திருந்த நாட்களில், முதலில் மகளின் பரிபூர்ண
அனுபவிப்புக்குள்ளானவள், எனது மகன் சேர்ந்தபின் இருவருக்கும் சமமாக, அன்பாக தன்னை பகிர்ந்து
அளிந்துக்கொண்டாள்.
அவளெங்களுடன் சேர்ந்த முதல் வருடத்தில், இரு மாதங்களுக்கு ஒரு முறை அவளை காப்பகத்தில் கொண்டு விடும் தருணம் எனது எடை கூடும், மனக்கனத்தினால். அவ்வகத்தில் அவளை விடுத்து அதன் வாசல் வரும் வரை நடக்கும் தருணங்கள் முழுவதும், முகம் திருப்பி அவளை ஏக்கத்துடன் பார்த்த தருணங்களாக நிரம்பியிருக்கும். காப்பகத்திலிருந்து அவளை அழைத்து செல்ல சொல்லும் அலைபேசி அழைப்பு சுக கீதமாக மனதை நனைக்கும்.
ஆயிரத்தி அறுநூற்றி ஐம்பத்தி எட்டிலிருந்து எழுநூற்றி பதினெட்டாக
உருமாறிய பிறகு எங்களது நெருக்கம் பன்மடங்கானது.
இத்துணை நெருக்குத்துடன் இருந்த நாட்கள் கனவாக, வெறும் கனவாக கடந்த இரண்டு மாதங்கள். இன்று அவளுடன் அளவளாவிய நிமிடங்கள் குறைவானதென்றாலும் நிறைவாக மனச்சுமைகள் இறக்கிய தருணங்களாக. கொரோனாவின் மற்றொரு பாதிப்பு, எனக்கும் எனது இரண்டாவது மகள், "மஹிந்திரா எக்ஸ்.யூ. வி 500"க்கும் இடையே ஏற்படுத்திய தற்காலிக பிரிவு.